‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’
என்று ஒரு சொலவடை இருக்கு.
‘ஏய்ச்ச’ என்றால் ஏமாற்றிய என்று அர்த்தம்.
ஆடுமேய்க்கும் ஒருவன் ஆட்டுப்பட்டி அருகே அமர்ந்திருந்தான். கோடைகாலத்தில் தாகமெடுத்த நரி ஒன்று தண்ணீர் தேடி அந்த பக்கமாக வந்தது.
நரி ஆடு மேய்ப்பவனிடம் தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று கேட்டது.
ஆட்டுத் தொழுவத்தில் தண்ணீர் இருந்தது. ஆனால் நரியை அங்கு குடிக்கச் சொன்னால் தனது தந்திரத்தை பயன்படுத்தி ஆடுகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடும் என்று நினைத்தான்.
சற்று யோசித்து விட்டு நரியிடம் பேசினார்.
“இந்த திசையில் நேராகப் பார். அங்கு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. நீ அங்கு சென்றால் தண்ணீர் குடிக்கலாம்.” என்றார்.
ஆனால் உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது கோடைகாலத்தில் தோன்றும் கானல் நீர்.
நரி தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் நீரோட்டம் இல்லை. ஆனால் இன்னும் தூரத்தில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது.
நரிக்கு அது நீரோட்டம் போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது. ஏமாந்து போனது.
கானல் நீர் தனக்கு குடிக்க கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நரி ஓடிக்கொண்டே இருந்தது.
தந்திரத்திற்கு பெயர் போன நரியையே ஏமாற்றிய தந்திரக்காரனைப் பற்றிய சொலவடை தான்
‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’
‘நான் ஏமாற்றிய நரியே இன்னும் தண்ணீர் குடிக்காமல் அலைகிறது. அப்பேர்ப்பட்ட என்னை நீ ஏமாற்ற நினைக்கிறாயா?’ என்பது தான் அதன் பொருள்.
ஒருவரை எளிதாக ஏமாற்ற முடியாது என அவர் நினைக்கும் போது இந்த சொலவடையை கூறலாம்.
தமிழில் இதுபோல ஏராளமான சொலவடைகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையினை இரு வரிகளில் மடித்து வைக்கப்பட்டிருப்பது தமிழின் அழகு.
வெயில் காலங்களில் நேராக சென்று கொண்டிருக்கும் ரோட்டில் தூரமாக பார்த்தால் கானல் நீர் உங்களுக்கு தெரியும்.
மரம் போன்ற உயரமான பொருள்களிலிருந்து வரும் ஒளி தரையை நோக்கிக் செல்லச்செல்ல காற்றின் வெவ்வேறு அடுக்குகளில் முழு அக எதிரொளிப்பு அடையும்.
இதனால் ஒளி தரையின் அடியிலிருந்து வருவது போன்ற ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். காற்று அடுக்குகளின் அசையும் தன்மையினால் நீர் நிலையில் இருந்து எதிரொளிப்பது போன்று தெரியும். அல்லது பொருளுக்கு அடியில் ஈரப்பரப்பு உள்ளது போனறு தெரிவதைத் தான் கானல் நீர் என்று அழைக்கிறோம்.
அந்த கானல் நீர் பற்றி இந்த சொலவடையில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றனர் பார்த்தீர்களா!.
No comments:
Post a Comment